Wednesday 4 March 2015

சுன்னத்து செய்யாத குருதேவ் சிங் சீக்கியரா? இஸ்லாமியரா?

எப்படி நமது அரசியலமைப்பு சட்டம் களவாடப்பட்டது? எதனால் சமயம் சார்புடைய சர்ச்சைகளில் முஸ்லிம் அல்லாதவரும் ஷரியா நீதிமன்றம் செல்ல நேர்ந்தது?  இதற்கு ஓர் இணக்கமான முடிவை எப்படிக் காண்பது? விடை கான, விருவிருப்பாகவும் தெளிவாகவும் மூத்த வழக்கறிஞர் கி. சீலதாஸ் செம்பருத்திக்காக ‘சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! ‘ என்ற தலைப்பில் எழுதிவரும் தொடர், சிறப்பு கட்டுரை பகுதியில் வெளியிடப்பட்டு வருகிறது. படிக்கத் தவறாதீர்!
(கட்டுரைத் தொடர்ச்சி பகுதி 4) 
part4 1 siladassஅரசியலமைப்புச்  சட்டத்தின்  121(1)  சரத்தில்  செய்யப்பட்டத்   திருத்தங்கள்  1988இல்  அமலாக்கப்பட்டப்பின்  உயர்  நிதிமன்றங்கள்  முன்னே  கொண்டுவரப்பட்ட  வழக்குகளைக்  கவனிப்போம். 
1992ஆம்  ஆண்டில்  டலிப்  கோருக்கும்  புக்கிட்  மெர்டாஜம்  மாவட்ட  போலீஸ்  அதிகாரிக்கும் (Dalip  Kaur v.Pegawai Daerah,  Bukit  Mertajam) நடந்த   வழக்கில்  சில  ஆக்கப்பூர்வமான  கருத்துக்களை  வெளியிட்டது  மலேசியாவின்  உச்ச  நீதிமன்றம் (Supreme  Court).
டிலிப்  கோர்  தொடுத்த  வழக்கில்,  தன்  மகன்  குருதேவ்  சிங்  3.10.1990இல்  இறந்தபோது  ஒரு  முஸ்லிம்  அல்ல, அல்லது  இஸ்லாத்தைத்   துறந்துவிட்டார்  என்று  நீதிமன்றத்தின்  பிரகடனத்தை  வேண்டினார்.  தமது  மனுவில்  தன்  மகன் குர்தேவ்  சிங்  சீக்கியராகப்  பிறந்தவர்.  சீக்கிய   ஆச்சாரப்படி  வளர்க்கப்பட்டவர்.  1.6.1991ல்  இஸ்லாத்தைத்  தழுவினார்.  9.9.1991ல்  ஒரு  பத்திரத்தின் மூலமாக (Deed  Poll)  இஸ்லாத்தைத்  துறந்து  மீண்டும்  சீக்கிய  சமயத்துக்குத்  திரும்பி  அதன் ஆச்சாரத்தைப்   பின்பற்றினார்.  இறந்த  தன்  மகன் சீக்கிய கோயிலுக்கு  அடிக்கடி  போனார், பன்றி  இறைச்சியையும்  உண்டார், நுனித்தோலை,  அதாவது  சுன்னத்து,  செய்து  கொள்ளவில்லை  என்றும்   குறிப்பிட்டிருந்தார்,
[இதற்கு முன்பு வெளியான பகுதிகள், இப்பகுதியின் இறுதியில் இணைக்கபட்டுள்ளன] 
இறக்கும் போது முஸ்லிம்தான்
part 42நீதிமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட்ட   ஆவணங்களில்  குர்தேவ்  ஒரு  முஸ்லிம்  பெண்ணை  25.11.1991ல்  திருமணம்  செய்து கொள்ள  திட்டமிட்டிருந்தார்  என்பது  வெளிப்பட்டது.  அதோடு,  தாம் இஸ்லாத்தைத்  துறந்துவிட்டதாக  குறிப்பிடப்பட்ட  பத்திரம்  போலி  கையெழுத்தைக்  கொண்டிருந்தது  என  உயர்நீதிமன்றம்  முடிவுக்கு  வந்தது.  இந்த  ஆவணங்கள்  எல்லாம்  கண்ணுற்ற  நீதிபதி,  குருதேவ்  இறக்கும்போது முஸ்லிமாக  இறந்தார்  என்று  தீர்ப்பளித்தார்.
அந்தக்  காலகட்டத்தில்  இயங்கிய  உச்ச  நீதிமன்றத்துக்கு (Supreme  Court) மேல்முறையீடு  செய்யப்பட்டது.  அப்போது  மலாயா   உயர்நீதிமன்றங்களின்   தலைமை  நீதிபதியாக  இருந்த  ஹஷிம்  யோப்  ஸானி (Hashim  yeop Sani),  121(1A)  ஷரத்தை  வியாக்கியானம்   செய்தது  அப்பழுக்கற்றது  என்று  சட்ட அறிஞர்களும்,  அரசியலமைப்புச்  சட்ட நிபுணர்களும்  ஒருமித்து  ஒப்புக் கொண்டனர்.
மாநில அரசு இஸ்லாமிய சட்டத்திற்கு சிவில் நீதிமன்றம் அடிபணியுமா?  
part43தலைமை  நீதிபதி  தமது  தீர்ப்பில்,  தெளிவான  சட்ட விதிகளை  இயற்றுவது  மாநிலங்களின்  பொறுப்பாகும்,  இதன்  வழி  சிவில்  நீதிமன்றங்கள்  அவற்றை  வியாக்கியானம்  செய்யும்  போது  குழப்பத்தைத்   தவிர்க்க  உதவும்  என்றார்.  அதோடு  10.6.1988லிருந்து   121(1A)   ஷரத்தின்படி  ஷரியா  நீதிமன்றங்களின்  அதிகாரத்தில்   தலையிடும்  சிவில்  நீதிமன்றங்களின்  அதிகாரம்  நீக்கப்பட்டுவிட்டது.  ஆனாலும்  மாநில  அரசுகள்  முஸ்லிம்  சட்டத்தை  நிர்வகிக்கும்  பொருட்டு  இயற்றும்  எந்தச்  சட்டத்தையும்  வியாக்கியானம்  செய்யும்  சிவில்  நீதிமன்றத்தின்  அதிகாரத்தை   நீக்கிவிடவில்லை  என்றார்.
இதன்  அர்த்தம்  என்னவெனில், 121(1A)   ஷரத்து  சிவில்  நீதிமன்றங்களின்  அதிகாரத்தை  இஸ்லாம்  சம்பந்தப்பட்ட  கருப்பொருள்களில்  தலையிடுவதை  தடுத்த  போதிலும் இஸ்லாமியச்  சட்டத்தை  நிர்வகிக்கும்  பொருட்டு  மாநில  அரசுகள்  இயற்றும்  மாநில  இஸ்லாமியச்  சட்டத்தை  வியாக்கியானம்  செய்யும்  அதிகாரம்  சிவில்  நீதிமன்றத்துக்கு  உண்டு.  ஏன்  இப்படி  அவர்  சொன்னார்  என்பதை  கவனிக்க  வேண்டும்.
இஸ்லாமிய  சட்டத்தை  நிர்வகிக்கும்  அதிகாரம்  மாநில  அரசுகளுக்கு   இருந்த  போதிலும்  அப்படி  இயற்றப் பெற்ற  இஸ்லாமிய  சட்டங்கள்   அரசியலமைப்புச் சட்டத்துக்குப்  புறம்பாக  இருக்கக்கூடாது   என்ற  அரசியல்   சட்டத்தின் அடிப்படைத்  தத்துவத்தின்  முக்கியத்துவத்தை  வலியுறுத்தியது.
அரசியலமப்பு ஒப்புயர்வற்றது – பூனைக்கு யார் மணி கட்டுவது?
part 44இன்னும்  விரிவாகச்  சொல்ல  வேண்டுமானால்   அரசியலமைப்புச்  சட்டத்தின்  4ஆம்  ஷரத்தானது  “இந்த  அரசியலமைப்புச்  சட்டம்  கூட்டரசின்  ஒப்புயர்வற்ற  சட்டமாகும்,  சுதந்திர  தினத்திற்குப்  பிறகு (31.8.1957)  “இந்த  அரசியலமைப்புச்  சட்டத்திற்குப்  புறம்பாக  இயற்றப்படும்  சட்டம்  செல்லுபடியாகாது”  என்கிறது.
இதன் அடிப்படையில்  அரசியலமைப்புச்  சட்டத்திற்குப்  புறம்பாக  மாநில அரசுகள்  சட்டம்  இயற்றினால்  அவை  செல்லத்தக்கதல்ல  என்பதில்  ஐயமில்லை.  அவ்வாறு  இயற்றப்   பெற்ற  சட்டத்தை   வியாக்கியானம்  செய்து அது  செல்லத்தக்கதல்ல  என்று  பிரகடனப்படுத்தும்  அதிகாரம்  மதச்சார்பற்ற  உயர்நீதிமன்றத்துக்கு  உண்டு.
இதைத்தான்  தலைமை  நீதிபதி  ஹஷிம்  யோப்  ஸானி  சொன்னார்.  அதுவே  அரசியலமைப்புச் சட்டம்  வழங்கும்  பாதுகாப்பு.  அதாவது,  சட்டத்திற்குப்  புறம்பாக  எடுக்கப்படும் எந்த  நடவடிக்கையையும்   செல்லத்தக்கது  அல்ல என்று  பிரகடனப்படுத்தும் அதிகாரம் சிவில்  உயர்நீதிமன்றங்களுக்கு  மட்டுமே  உண்டு.
டலிப்  கோரின்  வழக்கில்  மற்றுமொரு  முறையைக்  கடைபிடித்ததைக்  காணலாம்.  சிவில்  நீதிமன்றம்  இஸ்லாத்தைப்  பற்றி  எல்லா  நுணுக்கமான  விவரங்களையும்  அறிந்து  கொண்டிருக்க  முடியாது.  எனவே,  இருதரப்பினரின்  ஒப்புதலோடு  கிட்டா  ஃவத்வா  (Fatwa)  குழுவின்  அபிப்பிராயத்தைக்   கோரும்படி  விழைந்தது  உச்ச நீதிமன்றம்.  அந்தக்  குழு  குருதேவ்  சிங்  இறக்கும்போது  முஸ்லிமாக  இறந்தார்   என்ற  வெளியிட்ட  முடிவை  நீதிமன்றம்  ஏற்றுக்கொண்டது.
மதச்சார்பற்ற   நீதிமன்றம்   சில  வேளைகளில்  நிபுணத்துவ   அபிப்பிராயங்களைப்  பெறுவது  ஒன்றும்  புதிதல்ல – ஆச்சரியமானதுமல்ல.  எனவே,  ஃபத்வா (Fatwa)  குழுவின்  அபிப்பிராயத்தைப்  பெற்று மதச்சார்பற்ற  நீதிமன்றம்  ஒரு  முடிவுக்கு  வர  எந்தத்  தடங்களும்  இல்லை,  இருந்ததுமில்லை.
முர்தாட் ஆனாலும் ஷரியாவுக்கு செல்வது சரியா?   
s1மற்றுமொரு  வழக்கில்  121(1A)      ஷரத்தை 1994இல்   வியாக்கியானம்  செய்தது  உயர்நீதிமன்றம்.  சூன்  சிங்குக்கும்  பெர்துபோஹான்  கெபாஜிக்கான்  இஸ்லாம்  மலேசியா (பெர்க்கிமுக்கும்)         (Soon  Singh  V. Pertubuhan  Kebajikan  Islam  Malaysia)  நடந்த  வழக்கில் சூன்  சிங்  பிறப்பிலிருந்து  சீக்கிய  ஆச்சாரப்படி  வளர்க்கப்பட்டவர்;  14.5.1988இல்  அவர்  இஸ்லாத்தைத்  தழுவி  தம்  பெயரையும்  மாற்றிக்கொண்டார்.  16.7.1992இல்  அவர்   மீண்டும்  சீக்கியச்  சமயத்தைத்  தழுவினார்.  27.7.1992ல்  தாம்  இஸ்லாத்தைத்   துறந்துவிட்டதாக சத்தியப்  பிரமானம்  செய்து  பிரகடனப்படுத்தினார். தாம்   இஸ்லாத்தைத்  தழிவியபோது  பதினெட்டு  வயதை   அடையவில்லை  என்றும்  குறிப்பிட்டார்.  சூன்  சிங் தொடுத்த   வழக்கில்  தாம்  முஸ்லிம் அல்ல   என்று  பிரகடனப்படுத்தும்படி  உயர்  நீதிமன்றத்தை   வேண்டினார்.
பெர்க்கிம்  முன்வைத்த  ஆட்சேபனை  என்னவெனில்,  121(1A)  ஷரத்தின்படி   மதச்சார்பற்ற  உயர்நீதிமன்றத்துக்கு  இந்த  வழக்கை  விசாரிக்கும்  அதிகாரம்  இல்லை  என்பதாகும்.  இதன்  அடிப்படையில்  சூன்  சிங்கின்  மனு  நிராகரிக்கப்பட்டது.  பெர்க்கிம்  முன்  வைத்த  ஆட்சேபனையைச்  செவிமடுத்த  நீதிபதி,  சூன்  சிங்  இஸ்லாத்தைத் துறந்துவிட்டார்  என்பதை முடிவு  செய்யும் அதிகாரத்தை  ஷரியா   நீதிமன்றம்  மட்டும்தான்  பெற்றிருக்கிறது  என்பதால் சூன்  சிங்  அந்த  நீதிமன்றத்துக்கே போக  வேண்டும்  என்று  தீர்ப்பளித்தார்.
சமயம் என்பது தனிநபரின் மார்கமா? அரசாங்கத்தின் கட்டாயமா?  
s3இங்கே  கவனிக்க  வேண்டிய  விஷயம்  என்னவென்றால்  சமயவழிபாடு  என்பது  ஒருவரின்  மனதை  பொறுத்தது.  ஒருவர்  தம்  மனதில்  எதை,  எப்படி  நினைக்கிறார்  என்று  பிறர்  சொல்வது,  கணிப்பது  கடினம்.  உயிரோடு  இருப்பவர்  தாம்  ஒரு  மார்க்கத்தைப்   பேணுவதாகச்   சொன்னால் அதைவிட  சான்று  வேறு  எதுவும்  தேவை   இல்லை.  ஒருவரின்  மனநிலை  எப்படி  இயங்கிக்   கொண்டிருக்கிறது   என்பதை   வெளிப்படுத்தும்   ஆற்றல்  அந்த  நபருக்கே   உண்டு.  சட்டப் பூர்வமாக ஒருவரின் மனநிலை   எப்படி   செயல்பட்டது  என்பதை  நிர்ணயிக்க  அவர் நடந்து  கொள்ளும் முறை,  கையாண்ட வாழ்க்கை  முறை போன்ற சான்றுகள்  உதவலாம்.  ஆனால்  அவை  முடிவானவை  என்று சொல்வதற்கில்லை என்றாலும்,  மதச்  சம்பந்தமான  விஷயங்களில்  அவர்   வெளிப்படையாகச் சொல்வதை ஏற்றுக்  கொள்ளப்பட வேண்டும்.
ஒருவர்  இஸ்லாத்தை   விட்டு  விளகிப்  போனால்  அவரை  முர்தாட் (Murtad)  என்று  சொல்லப்படும்.  அதாவது  இஸ்லாத்தை  விட்டுப்  போனவர்.  அப்படியானால்  தம்  வாழ்நாளில்  அந்தச்  சமயத்தைத்  துறந்தவர்  முஸ்லிமாகக்  கருதமுடியாது.  அவர்  முர்தாட்.  எனவே,  ஷரியா   நீதிமன்றத்துக்கு  அவர்  மீது அதிகாரம்  செலுத்த முடியாது  என்றும்  சொல்லலாம்  அல்லவா?
 அரசியலமைப்பின் உத்திரவாதம் என்னானது?
அதோடன்றி,  அரசியலமைப்புச்  சட்டத்தின்  11(1)ஆம்  ஷரத்து  கொடுக்கும்  உத்திரவாதத்தை  கவனிக்க  வேண்டும்.  எந்த  ஒரு  நபரும்  தன்  மதத்தை  பேணவும்  அதைப் பரப்பவும்  உரிமையுண்டு  என்று  அது  சொல்கிறது.  11(4)ஆம்  ஷரத்து,  பிற  சமயங்களின்   போதனையை  அல்லது  நம்பிக்கையை  முஸ்லிம்களிடையே  பரப்புவதைக்  கட்டுப்படுத்தவோ  அல்லது  வரையறுக்கவே   மாநிலங்கள்  சட்டம்  இயற்றலாம்   என்கிறது.  எனவே,  இஸ்லாத்தைத்   துறப்பவர்கள்  மீண்டும்  ஷரியா   நீதிமன்றத்தின்   அங்கீகாரத்தைப்   பெற்றாக   வேண்டும்  என்ற  சட்டம்   அரசியலமைப்புச்   சட்டத்திற்குப்   புறம்பாக   இருக்கிறது  என்றால் அது  தவறில்லை.  இப்படிப்பட்ட  சூழ்நிலையில்   மதச்சார்பற்ற  நீதிமன்றங்களை  ஒருவரின்   சமயத்தைப்  பற்றி  தீர்மானிக்கும்   தகுதியும்  அதிகாரமும்  பெற்றிருப்பதைக்   காணமுடிகிறது.
சூன் சிங்கின்  வழக்கை  விசாரித்த உயர்  நீதிமன்ற   நீதிபதி,  டலிப்  கோர் வழக்கில்   தலைமை  நீதிபதி  ஹஷிம்  யோப்  ஸானி  கருத்தை  கவனத்தில்  கொள்ளாதது  துரதிர்ஷ்டமே.  உச்ச  நீதிமன்றத்தின்  தீர்ப்பு  புதுவிதமான  வியாக்கியானத்தை  அறிமுகப்படுத்தி  நாளடைவில்  பெரும்  சிக்கலுக்கு  துணைபோயிற்று.
சிவில் சட்டங்களை ஒடுக்க் முற்பட்டவர் அகமது  இப்ராஹீம்  
s2அரசியலமைப்புச்  சட்டத்தின்  121(1)ம்  ஷரத்தில்  கொண்டுவரப்பட்ட  திருத்தங்கள்  தேவையானவை  என  வாதிட்டவர்களில்  முக்கியமானவர் காலஞ்சென்ற  பேராசிரியர்  டாக்டர்  அகமது  இப்ராஹீம்  ஆவார்.
அவருடைய   கருத்துப்படி  மதச்  சார்பற்ற  உயர்  நீதிமன்றங்கள்  பல  வழக்குகளில்  இஸ்லாத்தின்   கோட்பாடுகளுக்கு  முரணான  தீர்ப்புக்களை  வழங்கியதைச்   சுட்டிக்காட்டி  ஷரியா  நீதிமன்றங்கள்  புதிதாகப்  பெற்றிருக்கும்  அதிகாரத்தைச்  செம்மையாகப்  பயன்படுத்த  வேண்டுமென்றார்.  அதோடு  ஷரியா  நீதிமன்றங்கள்  திறம்பட செயல்பட  வேண்டுமாயின்  மேலும்  பலச்  சட்டங்களை  ரத்துச் செய்யும்படியும்  அவர்  முன்மொழிந்தார்.  நல்ல  வேளையாக  கூட்டரசு  அரசு  அப்படி  ஒரு  காரியத்தைத்  தவிர்த்தது  போற்ற  வேண்டிய   செயலாகும்.
அகம்மது  இப்ராஹீம்  இஸ்லாமிய  சட்ட  நிர்வாகத்தைப்  பற்றி  விரிவாகக்   கருத்துரைத்தாரேயன்றி   பல்லினம்   வாழும்  மலேசியாவின்   உண்மையான  நிலையைக்   கிஞ்சித்தும்  சிந்தித்துப்   பார்த்ததாகச்   சொல்வதற்கில்லை.  அவருடைய  கருத்துகள்   ஒருதலைப்   பட்சமாக   அமைந்திருந்ததோடு  நியாயமான  நீதி    பரிபாலனத்திற்கு   உதவவில்லை  என்றுதான்  சொல்ல  வேண்டும்.
- தொடரும்.
பகுதி 1 - குழப்பத்திற்கு யார் காரணம் 
பகுதி 2 –  உரிமையை பறிக்க அரசியல் சட்ட மாற்றம்
பகுதி 3 – வினையால் விளையப்போகும் கொடுமைகள் 


  • MOHAN wrote on 9 August, 2013, 11:08
    குருதேவ் சிங் சீக்கியரா? இஸ்லாமியரா? யாரா இருந்தால் என்ன ,வெறும் மனிதரே
  • raj wrote on 9 August, 2013, 11:53
    அதிகாரங்கள் முஸ்லிம்களின் கையில் இருக்கும் வரை நியாயத்தை எதிர்பார்க்கமுடியாது. தற்பொழுது எத்தனை முஸ்லிம் அல்லாதவர்கள் நீதிபதிகளாக இருக்கின்றனர்? இருப்பவன்கள் எல்லாம் அம்னோ கைகூலிகள். அத்துடன் இவன்களின் திறமையை பற்றி அதிகமாக கூற ஒன்றும் இல்லை. இதெற்கெல்லாம் காரணம் MIC -யும் MCA -யும் ஆகும். இவன்கள் நம்மை காலத்துக்கும் அடகு வைத்துவிட்டான்கள் அவன்களின் வங்கி கணக்குக்காக.. அதிலும் முஸ்லிம்களிடத்தில் எக்காலத்திலும் நியாயத்தை எதிர்பார்க்கமுடியாது–இது இன்றைய நிலை . எல்லாவற்றையும் கட்டாயத்தினால் சாதிக்கபார்க்கின்றனர்-
  • PARASAKTHI HERO wrote on 9 August, 2013, 12:37
    எவர் ஒருவர் முழு மனதோடு கலிமா சொல்லிவிட்டாரோ அவர் முஸ்லிம் மாகிவிட்டார், யூதர்கள் கூட சுன்னத் செய்கிறார்கள் அதற்காகே அவர்களை( கலிமா சொல்லும் வரை) முஸ்லிம் என்று ஏற்று கொள்ள முடியாது, மறுமை நாளில் இஸ்லாத்தை ஏற்று கொள்ளாத மக்கள் நாங்களும் முஸ்லிமாக ஆகீருந்தால் நன்றாக இருக்குமே என்று கதர்வார்கள் என்று இறைவன் தன்னால் படைக்க பட்ட மக்களை அச்சம்மூட்டி எச்சரிக்கிறான். ( பார்க்க திருகுர் ஆன்)
  • naachell wrote on 9 August, 2013, 18:00
    மதத்தை தேர்ந்து எடுப்பது அவரவர் உரிமையைப் பொருத்தது இதில் அரசியல் அமைப்பு திட்டங்களை உட்புகுத்துவது எந்தவகையில் நியாயம்?
  • Venthan wrote on 10 August, 2013, 0:27
    இப்போது உலகத்தின் மிக வேகமாக வளரும் பரவும் மதம் Islam தான் ,இத்தனைக்கும் இப்போது இஸ்லாத்தைப்பற்றி தவறாக விமர்சனம் வந்தாலும் America மற்றும் Europe இல் அதிகமான மக்கள் இஸ்லாத்தை தழுவி உள்ளார்கள் , அதனால் முர்தாத் எல்லாம் இப்போதைக்கு கற்பனைதான் …
  • நேத்ரா wrote on 14 August, 2013, 12:36
    “மறுமை நாளில் இஸ்லாத்தை ஏற்று கொள்ளாத மக்கள் நாங்களும் முஸ்லிமாக ஆகீருந்தால் நன்றாக இருக்குமே என்று கதர்வார்கள் என்று இறைவன் தன்னால் படைக்க பட்ட மக்களை அச்சம்மூட்டி எச்சரிக்கிறான்”.. ஒகே.. அப்படிபட்ட இறைவன் மற்ற சமயங்களின் பிறப்பை நிறுத்திவிட்டு தனது தேர்வான சமயத்திலேயே எல்லா பிறப்புகளையும் படைக்கவேண்டியது தானே.. ஏன் இங்கே படைப்பு.. பின் மாற்ற வேண்டி எச்சரிக்கை? லோஜிக்?
  • BOTHIVARMAR wrote on 14 August, 2013, 18:39
    மறுமை நாளைப் பற்றி கவலப்பட வேண்டாம். இப்போதே மக்கள் செய்கின்ற ஒவ்வொரு செயல்களைப் பார்க்கும் போது இறைவனே இந்த மக்கள் இப்படி இருக்கிறார்களே என்று கதறுவான். அவரோடு சேர்ந்து நாமும் அனுதாபப் படுவோம்! உலகத்தில் இருக்கும் வரை அநியாங்களும் அக்கப்போர்களும் நடந்து கொண்டு தான் இருக்கும். மனிதன் திருந்தினால் மட்டுமே உலகம் அமைதிப் பூங்காவாக இருக்கும்!
  • kamapo wrote on 11 May, 2014, 23:45
    நேத்ரா, உங்களின் வாதம் மிகவும் லாஜிக்கான ஒன்னு. பிரச்சனை என்னவென்றால்….., மதங்கள் இந்தப் பகுத்து அறியும் லாஜிக்கை தங்கள் அருகில் சிறிதும் அண்ட விடுவதே இல்லை. உண்மையில் லாஜிக்கை சமயங்களில் புகுத்தினால் எல்லா மதங்களும் இயற்கை மரணம் எய்திவிடும். (அதனால் இப்புவி மானிடருக்கு எவ்வளோவோ நன்மை..!) அதனால்தான் லாஜிக்கைக் கொண்டு துருவி, பகுத்து ஆராய்ந்த பல பெரும்2 அறிவாளிகள் மதங்கள் கொட்டும் குப்பைகளை கண்டுக்கொள்ளவில்லை. அந்தக் குப்பைகளை சீண்டி2 முகர்ந்துப் பார்ப்பது லாஜிக்குக்கு வேலை கொடுக்காத மக்களே. துரதிஸ்டவசமாக இவர்களே அதிகம். அதனால் எண்ணற்ற பிரச்சனைகள் உலகிற்கு.
  • kayee wrote on 12 May, 2014, 4:05
    மதம் ஒன்ரே மனிதகுலத்தை அறத்தின் வழி நடக்க வாழ வழிவகுக்கிறது,வழிநடத்துகிறது.இஸ்லாம் இதை கடுமையாக வழியுருத்துகிறது.ஒழுக்கமீரலை கண்டிக்கிறது.யார் மதம் மார சொன்னது ?,உப்பை தின்பவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.இப்படி செல்பவன் துரோகி,தீயவன்,தாய் தந்தை,சொந்த பந்தத்தை,தன் மதத்தை,இனத்தாரை,சுற்றத்தாரை மதியாதவன்.திருமணத்துக்கு முன் இந்துவாக வாழ்கிறான் திருமணத்திற்கு பின் வேறு மதத்திற்கு மாறுகிறான்,போதை பொருள் எடுக்குரான்,தாடிவளர்த்து திரிகிரான் ஏன் ?,அன்பு என்று நம்பி வம்பில் மாட்டிக்கொண்டான்.நம்மிடம் அறம் இல்லை,அன்பு இல்லை,ஒழுக்கம் இல்லை.திருக்குறளில்,வேதத்தில் கோடிட்டதை மதிப்பதில்லை.வேத குருவால் ஆலப்படுவதில்லை சுக்ர குருவால் ஆழப்படுகின்றீர்( பக்தி மணதில் இருந்தால் போதும்என்பவர்)சுக்ரீவன் அசுரகுரு என்பது தெரியுமா.வாழ்க நாராயண நாமம்.
  • Theni wrote on 12 May, 2014, 8:47
    இறைவன் மனிதர்களைப் படைத்தான் என்பது இரு பெரு புறச் சமயங்கள் உணர்த்தும் இறை நியதி. “அப்படிபட்ட இறைவன் மற்ற சமயங்களின் பிறப்பை நிறுத்திவிட்டு தனது தேர்வான சமயத்திலேயே எல்லா பிறப்புகளையும் படைக்கவேண்டியது தானே” என்பது நேத்ராவின சரியான நெத்தியடி!. இறைவன் தன்னைப் பூஜிக்க மனிதர்களை படைத்தான் என்றால், இறைவன் என்ன தற்புகழ் விரும்பியா இல்லை அரசியல்வாதியா இவ்வாறான எண்ணம் இருக்க?. இறைவன் என்பவர்க்கு இத்தகைய நப்பாசை இருக்க முடியுமா?. முதலில் இறைவன் ஏன் மனிதர்களைப் படைக்க வேண்டும்? என்ற கேள்விக்கே பதில் அளிக்க முடியாது திணறும் இந்த இரு பெரு மதங்களும்!. வேதாந்தமோ, அவர்தம் வேதத்தில் சொன்னதை அப்படியே கேள்விக் கேட்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இம்மதவாதிகளின் தர்க்கம். இறைவனை “அவித்தை” மறைத்தது. அதனால் மாயை தோன்றியது. அந்த பிரம்மத்தின் பிம்பங்களாக தோன்றுபவையே உயிர்களும் உலகமும் என்று விளக்குகின்றது வேதாந்தம். பரம்பொருளாகி பிரம்மத்தை மறைக்கக் கூடிய, பிரமத்தை விட பலம் பொருந்திய மற்றொரு பொருள் இருக்க முடியுமா?. அப்படியானால் “அவித்தை” என்னும் ஒரு பொருள் பிரம்மத்தை விட அதி சக்தி வாய்ந்ததா என்ற கேள்விக்கு வேதத்தில் பதில் இல்லை. அது சொல்லவொணாதது (அநீர்வஷியம்) என்று விளக்கம் அளிக்கப்பட்டது வைதீக வேதாந்திகளால். ஆனால், தமிழன் ஒருவனே தர்க்க ரீதியாக (‘kamapo’ சொல்வதுபோல் ‘லோஜிக்காக’) சிந்தித்தான். அத்தகைய தர்க்க ரீதியான சிந்தனையில் இருந்து தோன்றியதுதான் ‘சித்தாந்தம்’. தொடரும்.
  • Theni wrote on 12 May, 2014, 9:17
    சித்தாந்தம் கூறுவது: இறைவன் உயிர்களை படைக்கவில்லை!. உயிர் என்றும் உள்ள பொருள் (அநாதிப் பொருள்) !. உயிர் ஆணவத்தில் அழுந்தி அறியாமையில் துன்பப்படுவதைக் கண்டு அவை பேரின்பம் எனும் முத்தி நிலையை அடைவதற்காக, அவற்றிற்கு தனு (உடல்), கரண (நுகரும் கருவிகள்), புவன (உலகம்), போகம் (நுகர்ச்சிப் பொருட்கள்) படைத்தருளினான் இறைவன். அவற்றினூடே கட்டுண்டு இருந்து மெது, மெதுவாக உயிர்கள் பக்குவப் பட்டு இறைவனை உணர்ந்து அடைய வேண்டும் என்பதே சித்தாந்தம் வகுத்த இறை நியதி. ஜாஹகிர் ஹுசெனுக்கே சித்தாந்தம் உணர்த்தும் இந்த இறை நியதி தெரியாது. அதனால்தான் அந்த மடச் சாம்பிராணி வேதத்தையும், வேதாந்தத்தையும் போட்டு வாங்கு, வாங்கு என்று வாங்குகின்றான். ஆனால் அவன் சித்தாந்தத்தில் கை வைப்பதில்லை. கை வைத்தால் சித்தாந்திகள் அவன் கையை சுட்டெரித்து விடுவார்கள். தமிழன் சமயத்திலும், தர்க்க ரீதியில் சிந்தித்து (நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல) இப்பூவுலகத்திர்க்கே முன்னோடியாக வாழ்ந்தான் என்பதே உண்மை. நாம் அவற்றைத் தெரிந்து, கற்றறிந்து அதன் வழி நிற்காமல், தமிழனுக்கு சமயமே இல்லை என்று வாதிடுவது முறையாகுமோ?. தமிழருக்கு இயற்கை வழிபாடே சமயம் என்பது முறையாகுமோ கமாப்போ?. முயற்சி செய்யுங்கள், தங்களுக்கும் சித்தாந்தம் அறிய திருவருள் கிட்டும். சட்ட ரீதியில் கட்டுரையாளரின் விளக்கத்திற்கான விமர்சனத்தை இரவில் தொடருவோம்.

No comments:

Post a Comment