Friday 3 July 2015

மந்திரித்தலும் , தாயத்துக் கட்டுதலும் மார்க்கத்தில் உள்ளவையே

மந்திரித்தலும் , தாயத்துக் கட்டுதலும் மார்க்கத்தில் உள்ளவையே 
யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால், அல்லது யாராவது ஷெய்த்தான், பேய், பிசாசு, ஜின் முதலானவற்றைக் கண்டோ அல்லது இனம் தெரியாத பயங்கர சத்தங்களைக் கேட்டோ பயந்தால் அதற்காக மந்திரித்தல், அல்லது ஊதிப் பார்த்தல், தண்ணீர் ஓதிக் கொடுத்தல், தாயத் – இஸ்ம் கட்டுதல் போன்றவை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையா? இல்லையா? என்ற விபரங்களை இத்தலைப்பில் எழுதுகின்றேன். மேற்கண்ட வேலைகள் செய்வதற்கு அறபு மொழியில் “ தல்ஸமாத் ” َطًْْلَََْسَمَاتْ எனப்படும். 

நான் இத்தலைப்பில் எழுதக் காரணம் வஹ்ஹாபிகளின் நடவடிக்கையே ஆகும். 

இவர்கள் மேற்கண்ட விடயங்கள் குப்ர், ஷிர்க், ஹராம் என்று தமது நூல்களில் எழுதியும், பிரச்சாரம் செய்தும் வருகிறார்கள். தமது இக்கொள்கையை பொதுமக்களின் உள்ளத்தில் பதித்துவிட தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். 
நோய், பேய், கண் திருஷ்டி நீங்குவதற்கு தாயத்து கட்டுதல், ஊதிப்பார்த்தல், தண்ணீர் ஓதுதல் போன்ற வழக்கம் முஸ்லிம்களிடமும், மற்ற மதத்தவர்களிடமும் தொன்றுதொட்டு இருந்து வருகின்ற ஒரு வழக்கமாகும். 

இந்த வழக்கம் இன்று வரை உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் இருந்தே வருகின்றது. இவை ஷிர்க் – இணைவைத்தலான விடயமென்றும், பாவமான விடயமென்றும் கண்ணையும், கல்பையும் மூடிக் கொண்டு கூச்சலிடுகின்ற வஹ்ஹாபிகள் செறிந்து வாழும் ஸஊதி அறபிய்யஹ்வில் கூட சில நல்லடியார்கள் இன்றுவரை “ தல் ஸமாத் ” வேலை செய்து கொண்டிருப்பதும், அங்குள்ள முப்திகளும் இதைக்கண்டும் காணாதவர்கள் போல் இருப்பதும் விந்தையான விடயமேயாகும். 

கண்திருஷ்டி 

கண்திருஷ்டி அல்லது கண்ணூறு என்பது உண்மையான விடயமேயாகும். இதற்கு திருக்குர்ஆனிலும். திருநபியின் நிறைமொழியிலும் ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் சிலதை மட்டும் இங்கு எழுதுகின்றேன். 

அல்குர்ஆனின் வசனம் 

நபீ யஃகூப் (அலை) அவர்களுக்கு பன்னிரண்டு ஆண்மக்கள் இருந்தனர். அவர்கள் அனைவருமே அழகுமிக்கவர்கள். கடைசி மகன் நபீ யூஸுப் (அலை) அவர்கள் ஏனைய சகோதரர்களைவிட மிக அழகானவர்கள். இவர்கள் அனைவரும் ஒன்றாகச் செல்லும் போது பார்ப்பவர்கள் வியந்து விடுவார்கள். ஒருநாள் நபீ யஃகூப் (அலை) அவர்கள் தமது பன்னிரண்டு மக்களிடமும் பின்வருமாறு கூறினார்கள். 

َوَقَالَ يَابَنِيَّ لََا تَدْ خُلُوْا مِنْ بَابٍ واحِدٍ وادْ خُلُوا مِنْ أبْوَابٍ مُتَََفَرِّ قََةٍ 

“ நீங்கள் அனைவரும் ஒரே வாயலால் நுழையாமல் பல வாயல்களால் நுழையுங்கள். 
( அல்குர்ஆன் ) 

ஆரம்ப காலத்தில் “ மிஸ்ர் ” நாட்டில் நுழைவதற்கு நான்கு வாயல்கள் அல்லது வழிகள் இருந்தன. நபீ யஃகூப் (அலை) அவர்களின் மக்கள் மிஸ்ர் நாட்டுக்குச் சென்ற சமயம் மேற்கண்டவாறு நபீ யஃகூப் (அலை) அவர்கள் உபதேசித்து அனுப்பி வைத்தார்கள். 

தந்தை யஃகூப் (அலை) அவர்கள் இவ்வாறு சொல்லக் காரணம், கண்திருஷ்டி, உண்மையான விடயமாயிருப்பதால் தமது பிள்ளைகளுக்கு அது ஏற்பட்டுவிடும் என்பதை அவர்கள் பயந்ததேயாகும். இவ்வாறு மேற்கண்ட வசனத்திற்கு திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர் இப்னு அப்பாஸ் (றழி) அவர்களும் இமாம் முஜாஹித், இமாம் கதாதஹ் போன்ற ஏனைய விரிவுரையாளர்களும் கூறியுள்ளார்கள்.

கண்திருஷ்டி உண்டு, அது உண்மை என்பதற்கும், அது ஏற்படும் வழியை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதற்கும், மேற்கண்ட மறை வசனம் மறுக்க முடியாத ஆதாரமாகும். கண்திருஷ்டி உண்டு என்பதை உறுதி செய்யக்கூடிய ஆதாரங்களிற் சிலதை இங்கு தருகின்றேன். 

ஆதாரம் – 01 

ஸஹ்ல் இப்னு ஹனீப் எனும் ஸஹாபி மிக அழகானவர்கள். ஒரு நாள் அவர் குளித்துக் கொண்டிருந்த சமயம் ஆமிர் இப்னு றபீஆஹ் என்ற ஸஹாபீ அவரின் உடலைக்கண்டு வியந்து இது என்னே உடல் என்று கூறினார். அக்கணமே குளித்துக் கொண்டிருந்த ஸஹாபீ மயங்கிக் கீழே விழுந்தார். நபீ (ஸல்) அவர்களிடம் இச்செய்தி சொல்லப்பட்ட பொழுது நபீ (ஸல்) அவர்கள் அவரின் விடயத்தில் யாரைச் சந்தேகிக்கின்றீர்கள். என்று சொன்னவர்களிடம் கேட்டார்கள். ஆமிர் இப்னு றபீஆஹ்வைச் சந்தேகிக்கின்றோம் என்று கூறினார்கள். நபீ (ஸல்) அவர்கள் அந்த ஸஹாபியை அழைத்து சற்றுக் கோபப்பட்டவர்களாக உங்களில் ஒருவன் தனது சகோதரனைக் கொலை செய்வதேன் ? என்று கேட்டுவிட்டு அவருக்காக நீ குளிக்க வேண்டும் என்று அவரைப் பணித்தார்கள். அவர் ஒரு பாத்திரத்தில் தனது முகம், கை, முழங்கால், கால் ஓரம், காலின் உட்பகுதி போன்றவற்றைக் கழுவிக் கொடுத்தார். அந்த நீர் மயக்கத்தில் இருந்த ஸஹாபியின் மீது தெளிக்கப்பட்டது. அவர் மயக்கம் நீங்கி எழுந்து சென்றார்.  
(ஆதாரம் – ஷர்ஹுஸ் ஸுன்னத் முவத்தா – மிஷ்காத்) 

ஆதாரம் – 02 

கண்ணூறுக்காக மந்திரிக்குமாறு நபீ (ஸல்) அவர்கள் பணித்தார்கள். (ஆதாரம் – புஹாரி) 

ஆதாரம் – 03 

உம்மு ஸல்மஹ் (றழி) அவர்களின் வீட்டில் நபீ (ஸல்) அவர்கள் ஓர் அடிமைப் பெண்ணைக் கண்டார்கள். அவளின் முகத்தில் மஞ்சள் நிறம் காணப்பட்டது. நபீ (ஸல்) அவர்கள் இவளுக்கு கண்திருஷ்டி உண்டு. ஆகையால் இவளுக்கு மந்திரம் சொல்லுங்கள் என்று கூறினார்கள்.  (ஆதாரம் – மிஷ்காத்) 

ஆதாரம் – 04 

கண்திருஷ்டிக்காகவும்,விஷக்கடிக்காகவும், பொக்களிப்பானுக்காகவும் மந்திரிக்க வேண்டும் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் – முஸ்லிம்) 

ஆதாரம் – 05 

நபீ (ஸல்) அவர்கள் தங்களின் மரண வருத்தத்தின் போது “ முஅவ்விததைன் ” எனப்படும் குல் அஊது பிறப்பில் பலக், குல் அஊது பிறப்பின்னாஸ் என்ற இரு அத்தியாயங்களையும் ஓதி தங்களின் கையில் ஊதி உடலெல்லாம் தடவிக் கொள்வார்கள். நபீ (ஸல்) அவர்கள் மந்திரம் சொல்வதைத் தடை செய்தார்கள். அம்றுப்னு ஹம்ஸ் என்பவரின் சந்ததிகள் நபீ (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் றஸுலே ! எங்களிடம் ஒரு மந்திரம் இருந்தது. தேள் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்தால் நாங்கள் அது கொண்டு மந்திரிப்போம். எனினும் நாயகமே ! மந்திரிக்க வேண்டாம் என்று நீங்கள் தடை செய்துள்ளீர்கள். நாங்கள் என்ன செய்வது ? என்று கேட்டார்கள். அதற்கு நபீ (ஸல்) அவர்கள் நீங்கள் சொல்லும் மந்திரத்தைச் சொல்லிக் காட்டுங்கள் என்றார்கள். அவர்கள் சொல்லிக் காட்டினார்கள். அதைக் கேட்ட நபீ (ஸல்) அவர்கள் அதில் குற்றமில்லை என்று கூறிவிட்டு உங்களில் யாராவது தனது சகோதரனுக்கு நன்மை செய்ய நாடினால் அவர் செய்யட்டும் என்று கூறினார்கள்.  (ஆதாரம் – முஸ்லிம்) 

ஆதாரம் – 06 

இஸ்லாத்துக்கு முன் “ அய்யாமுல் ஜாஹிலிய்யஹ் ” காலத்தில் நாங்கள் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தோம். அது பற்றி உங்களின் அபிப்பிராயம் என்ன நாயகமே என்று சிலர் கேட்டார்கள். அதற்கு நபீ (ஸல்) அவர்கள் உங்களின் மந்திரத்தைச் சொல்லிக் காட்டுங்கள் என்றார்கள். அவர்கள் சொல்லிக் காட்டியவுடன் சரி நீங்கள் செய்யலாம் என்று கூறிய நபீ (ஸல்) அவர்கள் மந்திரத்தில் “ ஷிர்க் ” ஆன விடயம் ஒன்றும் இல்லா விட்டால் மந்திரம் சொல்வதில் குற்றமில்லை என்று சொன்னார்கள். 

ஆதாரம் – 07 

உங்களில் யாராவது நித்திரையில் பயந்தால்,  
أََََعُوْذُُُ ُ ِبِكَلِمَاتِ اللهِ التََّامََّاتِّ مِنْ غَضَبِِهِِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ 
الشََّيَاطِيْنِ وَعَنْ يَحْضُرُوْنَ 
என்று ஓதிக் கொண்டால் அவருக்கு எத்தீங்கும் ஏற்படமாட்டாதென்று நபீ (ஸல்) அவர்க்ள கூறினார்கள். (ஆதாரம் – அபூ தாஊத்) 

இந்த துஆவின் பொருள் ;- “ அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் தண்டனையை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷெய்தான்களின் ஊசலாட்டத்தையும், அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் சம்பூரணமான வார்த்தைகளைக் கொண்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன் ” என்பதாகும். 

ஆதாரம் – 08 

அப்துல்லாஹ் இப்னு அம்று (றழி) அவர்கள் தங்களின் சிறிய மக்களுக்கும், பெரிய மக்களுக்கும் இந்த துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள். அதை ஒரு தோலில் எழுதி தங்களின் கழுத்திலும் கட்டிக் கொண்டார்கள். (ஆதாரம் – துர்முதீ – நஸயீ) 

ஆதாரம் - 09 

தாயத் கட்டுதல் “ஷிர்க்” இணைவைத்தலாகும் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள். தாயத் கட்டுதல் மட்டும் “ஷிர்க்” ஆகிவிடாது. தாயத் ஆகுமான வார்த்தைகள் கொண்டதாக இருக்குமாயின் அது ஆகும். “ஷிர்க்” ஆன வார்த்தைகள் கொண்டதாக இருக்குமாயின் அது ஆகாது.  

ஆதாரம் - 10 

நபீ (ஸல்) அவர்கள் தங்களின் பேரர்களான ஹஸன், ஹுஸைன் (றழி) இருவருக்கும், 
أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ كُلِّ شَيْطَانٍ وهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَا مَّةٍُ 
என்று ஓதி அவ்விருவரிலும் ஊதிவிட்டு உங்கள் தந்தை இப்றாஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீலுக்கு ஊதினார்கள் என்று கூறியுள்ளார்கள்.  (ஆதாரம் – புஹாரி) 
இந்த துஆவின் பொருள் ;- 

“கண்திருஷ்டியையும், ஆந்தை பக்கிளுடைய தீமைகளையும், ஷெய்த்தானுடைய தீமையையும் விட்டும் அல்லாஹ்வின் சம்பூரண வார்த்தைகள் கொண்டு நான் காவல் தேடுகின்றேன்.” என்பதாகும். 

ஆதாரம் - 11 

உங்களின் பிள்ளைகளுக்கு “ அஸ்ஹாபுல் கஹ்ப் ” குகைவாசிகளின் பெயர்களைக் கற்றுக் கொடுங்கள். ஏனெனில் அவர்களின் பெயர்கள் ஒரு வீட்டின் வாயலில் எழுதப்பட்டால் அந்த வீடு தீயினால் பாதிக்கப்படாது. ஒரு பொருளில் எழுதினால் அது திருடப்படமாட்டாது. ஒரு வாகனத்தில் எழுதினால் அது விபத்துக்குள்ளாகாது. என்று ஞான மகான்கள் கூறியிருப்பதாக அஷ்ஷெய்கு அஹ்மத் ஸாவீ (றஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் – தப்ஸீர்ஸாவீ) 

ஆதாரம் – 12 

குகைவாசிகளின் பெயர்கள் ஒன்பது விடயங்களுக்கு பிரயோசனம் செய்யுமென்று இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
காணாமல் போன பொருளைக் கண்டு பிடிக்க, விரோதிகள் விரண்டோட, தீயணைக்க, (அதாவது ஒரு துணியில்அப்பெயர்களை எழுதி எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எறிந்தால் நெருப்பு அணைந்து விடும்.), சிறுபிள்ளைகளின் அழுகையை நிறுத்த, மூன்றாம் முறைக் காய்ச்சலை நிறுத்த, தலையிடியைப் போக்க இம் மூன்று விடயங்களுக்கும் அப்பெயர்களை ஒரு தாளில் எழுதி வலது கையில் கட்டிக் கொள்ளுதல் வேண்டும். கடலிலும் கரையிலும் பிரயாணம் செய்பவர்களுக்கு, சொத்துக்களைப் பாதுகாக்க, புத்தி வளர்ச்சிக்கு (மூளை வளர்ச்சிக்கு) மேற்கண்ட ஒன்பது விடயங்களுக்கும் குகைவாசிகளின் பெயர்கள் பயன்படும். (ஆதாரம் – தப்ஸீர்ஸாவீ)

இதுவரை நான் எழுதிக் காட்டியுள்ள ஆதாரங்களுக்கும் கண்திருஷ்டி உண்டு என்பதையும் அதற்காக மந்திரிக்கலாம் என்பதையும் தெளிவாக விளக்குகின்றன.
وَقَالَ يَاَبِنيّ لاَ تَدْ خُلُوْا مِنْ بَابٍ وَاحِدٍ وَادْ خُلُوْا مِنْ أبْوَابٍ مُتَفَرِّقَةٍ 
நபீ யஃகூப் அலை (அலை) அவர்கள் கண்திருஷ்டி உண்டு என்பதை அறிந்திருந்ததினால் தனது மக்களுக்கு மேற்கண்டவாறு அறிவுரை வழங்கினார்கள் என்பதும். அவர்கள் ஒரு நபீயாக இருப்பதால் பொய்யான அல்லது இஸ்லாத்துக்கு விரோதமான ஒன்றை நம்பியிருக்க மாட்டார்கள் என்பதும், கண்திருஷ்டி வழிகளைத் தவிர்க்க வேண்டும் என்பதும் தெளிவாகின்றது 

கண்திருஷ்டிக்கு கவர்ச்சி முக்கியம். நபீயஃகூப் (அலை) அவர்களின் பிள்ளைகள் கவர்ச்சிக்குரியவர்களாக இருந்ததினால்தான் அவர்கள் அவ்வாறு செய்தார்கள். 

இவ்வடிப்படையில்தான் கவர்ச்சியான, பார்ப்பவனின் “நப்ஸ்” மனதுக்கு விருப்பமான உணவுப் பொருட்கள் மறைத்து வைக்கப் படுவதும் சாப்பிடும்போது மற்றவர்களுக்குத் தெரியாமல் சாப்பிடுவதுமாகும். குறிப்பாக பால் போன்ற வௌ்ளை நிற உணவுப் பொருட்கள் மிக விரைவில் கண்திருஷ்டி ஏற்படக் கூடியவைகளாகும். 

முதலாம் ஆதாரத்தில் இருந்து கண்திருஷ்டி உண்மை என்றும், அதனால் மயக்கம் ஏற்படுமென்றும், மயக்கமல்லாத வேறு குறை ஏற்படுமென்றும், அதற்காக கண்திருஷ்டிக்குரியவனின் முகம், கை, கால் போன்ற உறுப்புக்களைக் கழுவி அந்த நீர் கொண்டு கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவன் மீது தெளிப்பதால் சுகம் கிடைக்கும் என்றும், உங்களில் ஒருவன் தனது சகோதரனைக் கொல்வதேன் என்ற நபீ (ஸல்) அவர்களின் கூற்றில் இருந்து கண்திருஷ்டியால் மரணம் கூட நிகழலாம் என்றும் விளங்க முடிகின்றது. 

கண்திருஷ்டியால் மரணம் கூட நிகழலாம் என்பதை நபீ (ஸல்) அவர்களின் இன்னுமொரு பொன்மொழி தெளிவாக கூறுகின்றது. அது பின்வருமாறு. اَلْعَيْنُ تُدْ خِلُ الرَّ جَُلَ الْقَبْرَ  ( கண்திருஷ்டி ஒரு மனிதனை மண்ணறைக்கு அனுப்பிவிடும் ) இரண்டாம் ஆதாரத்தில் இருந்து கண்திருஷ்டி உண்மை என்றும், அதற்காக மந்திரிக்குமாறு நபீ(ஸல்) அவர்கள் பணித்துள்ளார்கள் என்றும் விளங்குகின்றது. 

நான்காம் ஆதாரத்தில் இருந்து கண்திருஷ்டிக்காகவும், விஷக்கடிக்காகவும், ​பொக்களிப்பான் நோய்க்காகவும் மந்திரிக்கலாம் என்றும், மந்திரிப்பதன் மூலம் இவை சுகமாகும் என்றும் விளங்குகின்றது. ஐந்தாம் ஆதாரத்தில் இருந்து
 “ குல்அஊது பிறப்பில் பலக், குல்அஊது பிறப்பின்னாஸ் ” என்ற இரண்டு அத்தியாயங்களும் நோய் நிவாரணி என்றும், அவ்விரண்டையும் ஓதுவதுடன் மட்டும் நின்று விடாமல் ஓதியபின் கையில் ஊதி உடலெல்லாம் தடவிக் கொள்வதில் பயன் உண்டு என்றும், மந்திரத்தில் இஸ்லாத்திற்கு விரோதமான சொற்கள் இல்லாவிட்டால் அந்த மந்திரத்தைப் பயன்படுத்தலாம் என்றும், கண்திருஷ்டிக்கும் விஷக்கடிக்கும் மந்திரிப்பதை தொழிலாகக் கொள்ளலாம் என்றும் விளங்குகின்றது. 

ஆறாம் ஆதாரத்தில் இருந்தும் மேற்கண்ட கருத்துக்களே கிடைக்கின்றன. 

ஏழாம் ஆதாரத்தில் கூறப்பட்ட “துஆ” ஒரு மந்திரம் என்றும், அது சகல நோய்களுக்கும் துன்பங்களுக்கும் ஒரு கேடயம் போன்றதென்றும் விளங்குகின்றது. 

எட்டாம் ஆதாரத்தில் இருந்து இந்த “துஆ” வை பாதுகாப்பைக் கருதி சிறுவர்களும், பெரியவர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இதை தோல், தாள், தகடு போன்றவற்றில் எழுதி உடலின் எந்தப் பகுதியிலேனும் கட்டிக் கொள்ளலாம் என்றும் விளங்குகின்றது. 

ஒன்பதாம் ஆதாரத்தில் இருந்து தாயத் கட்டலாம் என்றும், ஆனால் அதில் “ ஷிர்க் ” இணையை ஏற்படுத்தக்கூடிய வசனங்கள் இருத்தலாகாதென்றும் விளங்குகின்றது. 

பத்தாம் ஆதாரத்தில் இருந்து நபீ (ஸல்) அவர்கள் கூட “ தல்ஸமாத்” வேலை செய்துள்ளார்கள் என்றும், மற்றவர்களுக்கு ஊதிப்பார்த்துள்ளார்கள் என்றும், நபீ இப்றாஹீம் (அலை) அவர்களும் இவ்வேலையைச் செய்துள்ளார்கள் என்றும், ஷெய்த்தான், ஆந்தை – (பக்கிள்) கண்திருஷ்டி இம்மூன்றினாலும் ஏற்படும் தீமைக்கு இதில் கூறப்பட்ட ஓதல் – மந்திரம் பயன் தரும் என்றும், ஆந்தையினாலும் மனிதனுக்கு துன்பம் ஏற்படும் என்றும் விளங்குகின்றது. 

பதினோராம் ஆதாரத்தில் இருந்து குகைவாசிகளின் திரு நாமங்களை குறித்த ஒன்பது விடயங்களுக்கும் பயன்படுத்தலாம் என்றும், அவற்றை எழுதி தாயத் கட்டலாம் என்றும் விளங்குகின்றது. 

ஆதாரம் – 13 

நபீ (ஸல்) அவர்களின் ஸஹாபாக்களில் முப்பது பேர்கள் கொண்ட ஒரு கூட்டம் பிரயாணம் செய்து கொண்டிருந்த சமயம் அவர்களுக்கு ஓர் இடத்தில் தங்கிப் போக வேண்டிய தேவை ஏற்பட்டது. அங்கு அறபுக் காபிர்களில் ஒரு கூட்டத்தினர் வாழ்ந்து கொண்டிருந்தனர். நபித் தோழர்கள் அவர்களிடம் உணவு தருமாறு கேட்டார்கள். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். ஸஹாபாக்கள் பொறுமையுடன் திரும்பி விட்டனர். 

அதன்பிறகு அவ்வறபிகளின் தலைவனுக்கு பாம்பு அல்லது ​தேள் கடித்து விட்டது. அதனால் அவன் தலைக்கு விஷம் ஏறி உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தான். அவனைச் சுகப்படுத்துவதற்காகவும், அவனின் விஷத்தை இறக்கிவிடுவதற்காகவும் அவர்கள் கடும்பாடுபட்டனர். எனினும் அவர்களின் முயற்சி பயனளிக்கவில்லை. 

அவர்களில் ஒருவன், தற்போது இவ்விடத்தில் தங்கியிருக்கும் முஹம்மத் நபீயின் தோழர்களிடம் விஷமிறக்கும் மந்திரம் இருக்கலாம். அவர்களிடம் சென்று சொல்லிப் பாருங்கள் என்று ஓர் ஆலோசனை சொன்னான். 

அவனின் ஆலோசனைப்படி அவர்களிற் சிலர் ஸஹாபாக்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்து எங்களின் தலைவருக்கு விஷஜந்து தீண்டி விட்டது. எங்களால் முடிந்தவரை மருந்துகள் செய்தும் பயன்கிடைக்கவில்லை. உங்களிடம் மருந்து 

உண்டா ? உங்களில் மந்திரிப்பவர்கள் இருக்கின்றார்களா ? என்று கேட்டனர். 

அதற்கு நபித்தோழர்களில் ஒருவரான அபூஸயீ்த் (றழீ) அவர்கள் ஆம் விஷக்கடிக்கு நான் மந்திரம் சொல்லி இறக்கிவிடுவேன். எனினும் நாங்கள் உங்களிடம் வந்து உணவு கேட்டபொழுது தர மறுத்து எங்களை விரட்டினீர்கள் இப்போது எங்களிடம் உதவி தேடி வந்துள்ளீர்கள். எனவே நான் உங்களின் தலைவனின் விஷம் இறக்குவதாயின் எனக்கு முப்பது ஆடுகள் தர வேண்டும் என்று கேட்டார். அவரின் நிபந்தனையை ஏற்றுக்கொண்ட அவ்வறபிகள் அவரை அழைத்துச் சென்றனர். அவர் “ ஸூறதுல்பாதிஹா ”வை ஓதி விஷஜந்து கடித்த இடத்தில் துப்பினார். அக்கணமே தலைவனின் தலைக்கேறியிருந்த விஷம் இறங்கி விலங்கில் இருந்து விடுபட்டவன் போல உற்சாகத்துடன் எழுந்து சென்றான். அவர்கள் ஒப்பந்தம் செய்தபடி முப்பது ஆடுகளையும் பெற்றுக் கொண்டு நபித்தோழர் தனது கூட்டத்திடம் வந்து சேர்ந்தார். 

வெறுங்கையுடன் சென்ற ஸஹாபீ முப்பது ஆடுகளுடன் வந்ததைக்கண்ட நபித்தோழர்கள் மகிழ்ச்சி நிறைந்த குரலில், “ இந்த ஆடுகளையெல்லாம் நமக்கிடையே பங்கு வைத்துக் கொள்வோம், என்று சொன்னார்கள். இது கேட்ட மந்திரம் சொன்ன ஸஹாபீ நீங்கள் சொல்வது போல் செய்வதில்லை. நாம் நபீ (ஸல்) அவர்களிடம் சென்று நடந்த விஷயங்களைக் கூறுவோம். அவர்கள் சொல்வது போல் செய்து கொள்வோம் என்றார். அவரின் கூற்றை அனைவரும் சரி கண்டனர். 

பின்னர் அவர்கள் நபீ (ஸல்) அவர்களிடம் வந்து நடந்த விஷயத்தைக் கூறியுள்ளார்கள். நபீ (ஸல்) அவர்கள் மந்திரம் சொன்ன ஸஹாபியை பார்த்து நீங்கள் செய்தது சரியே. எனினும் அது மந்திரமென்று உங்களுக்கு எவ்வாறு தெரியும் ? என அவரிடம் வினவிவிட்டு நீங்கள் கொண்டு வந்திருக்கும் ஆடுகளில் எனக்கும் ஒரு பங்கு தாருங்கள் என்றார்கள். ( ஆதாரம் – புஹாரீ ) 

மேலே கண்ட நபீமொழி பல கருத்துக்களைத்தருகின்றது. அவற்றில் சிலதை மட்டும் இங்கு எழுதுகின்றேன். 

“ றுக்யத் ” என்றால் மந்திரம் என்றும், “ றாகீ ” என்றால் மந்திரிப்பவன் என்றும் பொருள் வரும். 

நபீ (ஸல்) அவர்கள் மந்திரம் சொல்லி விஷமிறக்கிய ஸஹாபீ ஸயீத் அவர்களைப் பார்த்து  وَمَا يُدْرِيْكََ أنَّهَا رقْيَةٌ  அது – (ஸூறதுல் பாதிஹஹ் ) மந்திரமென்று உனக்கு எவ்வாறு தெரியும் ? என்று கேட்டதிலிருந்து ஸூறதுல்பாதிஹஹ்க்கு மந்திரமென்று சொல்லலாமென்று தெளிவாகிவிட்டது. 

மந்திரம் சொன்ன ஸஹாபீ தான் செய்த வேலைக்கு முப்பது ஆடுகள் கேட்டதிலிருந்து மந்திரம் சொல்வதற்கு தொகை குறிப்பிட்டுக்கூட கூலி பேசலாம் என்பதும் தெளிவாகி விட்டது. இந்த நபீமொழி விஷக்கடிக்கு ஊதிப்பார்க்கவும், துப்பவும் முடியுமென்றால் விஷக்கடியல்லாத வேறு நோய்க்கு ஏன் ஊதிப் பார்க்கக் கூடாது ? ஏன் துப்பக் கூடாது ? 

விஷக்கடியோ, காய்ச்சல், வயிற்றுவலி, தலைவலி போன்ற நோயோ எதுவானாலும் அது மனிதனுக்கு வேதனையைத் தருகின்ற ஒன்றேயாகும். அதை நீக்கி வைப்பது ஆகுமென்பது மட்டுமன்றி அது ஒரு வணக்கமுமாகும். ஏனெனில் மேற்கண்ட ஐந்தாவது ஆதாரத்தில் உங்களில் யாராவது தனது சகோதரனுக்கு நன்மை செய்ய நாடினால் அவர் செய்யட்டும் ” என்று நபீ (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து மந்திரம் சொல்லி நோயுற்றிருப்பவர்களுக்கு உதவுவது “ நன்மை ” என்பது தெளிவாகின்றது. 

பாம்பு கடித்த அறபுத் தலைவனுக்கு ஸஹாபீ மந்திரம் சொல்லி விஷமிறக்கியதிலிருந்து முஸ்லிமுக்கு மட்டுமன்றிக் காபிரானவர்களுக்குக் கூட திருக்குர்ஆன் வசனங்கள் கொண்டு மந்திரிக்கலாம் என்பது தெளிவாகின்றது. இன்னும் இந்த நபீமொழியில் இருந்து இன்னொருவருக்கு திருக்குர்ஆன் ஓதுவதற்கு தொகை குறிப்பிட்டுக் கூலி பேசலாம் என்பதும், தல்ஸமாத், மந்திரித்தல், ஊதிப்பார்த்தல், இஸ்ம் தாயத் கட்டுதல் போன்ற வேலைகளுக்கு கூலிபேசி எடுக்கலாம் என்பதும், சிறிய வேலைக்கு முப்பது ஆடுகளைக் கூலியாகப் பெற்றதிலிருந்து சிறிய “ தல்ஸமாத் ” வேலைக்குக் கூட கூடுதலான தொகை பேசலாம் என்பதும் தெளிவாகின்றது. 

நபீ (ஸல்) அவர்கள் மரண வருத்தத்தில் இருந்த பொழுது “ முஅவ்விததைன் எனும் குல்அஊது பிறப்பில்பலக், குல்அஊது பிறப்பின்னாஸ் என்ற இரண்டு அத்தியாயங்களையும் ஓதி தங்களின் உடலில் ஊதிக் கொண்டார்கள். அவர்களின் வருத்தம் கூடிய பொழுது அவ்விரு அத்தியாயங்களையும் நான் ஓதி அவர்களில் ஊதினேன். அவர்களின் திருக்கரத்தின் “ பறகத் ” அருளைப் பெறுவதற்காக அதைக் கொண்டு எனது உடலில் தடவிக் கொண்டேன். என்று ஆயிஷா (றழி) அறிவித்தார்கள். ( ஆதாரம் – புஹாரீ ) (அறிவிப்பு – ஆயிஷா (றழி) ) 

மேலே நான் எழுதிக் காட்டிய நபீமொழி ஒன்றில் “ ஸூறதுல் பாதிஹஹ் ” மந்திரமென்று சொல்லப்பட்டிருந்தது. இப்பொழுது மேலே கூறிய இந்த நபீமொழியில் குறித்த இரண்டு அத்தியாயங்களும் மந்திரம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த நபீமொழியை புஹாரீ என்ற நூலில் பதிவு செய்த இமாம் புஹாரீ (றஹ்) அவர்கள் இந்த நபீமொழிக்கு  بَابُ الرٌّقَى بِالْقُرْآنِ وَالْمُعَوِّذَتَيْن  திருக்குர்ஆனைக் கொண்டும், குறித்த இரண்டு அத்தியாயங்கள் கொண்டும் மந்திரித்தல் என்னும் தலைப்பிட்டு இந்த நபீமொழியை எழுதியுள்ளார்கள். இதிலிருந்து இவ்விரு அத்தியாயங்கள் மட்டுமன்றித் திருக்குர்ஆனுக்கு மந்திரம் என்று சொல்ல முடியும் என்பதும் தெளிவாகின்றது. இதன்படி திருக்குர்ஆனின் எந்த வசனத்தைக் கொண்டும் மந்திரிக்க முடியும். நபீ (ஸல்) அவர்கள் இவ்விரு அத்தியாயங்களையும் ஓதியதுடன் மட்டும் நின்று விடாமல் கையில் ஊதி முகத்தில் தடவியதிலிருந்து ஊதுவதிலும், தடவுவதிலும் பயன் உண்டென்பது தெளிவாகின்றது. 

ஆயிஷா நாயகி (றழி) அவர்கள் நபீ (ஸல்) அவர்களின் கை கொண்டு தனது உடலில் தடவியதிலிருந்து அவர்களின் கையிலும் அருள் உண்டு என்பதும், நபீ அல்லாதவராயினும் அருள் உள்ள ஒருவரின் கை கொண்டு தடவிக் கொள்ளலாம் என்பதும் தெளிவாகின்றது. இதுவரை நான் எழுதியுள்ள ஆதாரங்கள் மூலம் கண்திருஷ்டி உண்மை என்பதும், அதற்காக ஊதிப்பார்க்க, தண்ணீர் ஓத, தாயத்துக்கட்ட முடியும் என்பதும், முழுத்திருக்குர்ஆனைக் கொண்டும், குறிப்பாக விஷேடமான சில அத்தியாயங்கள் கொண்டும் மந்திரிக்க முடியும் என்பதும் தெளிவாகிவிட்டது. இவை ஆகுமான விடயம் என்பதற்கு இன்னும் பல பலமான ஆதாரங்களும், பகுத்தறிவு ரீதியான தத்துவங்களும்உள்ளன. 

“ தல்ஸமாத் ” வேலைக்கு எண்ணற்ற ஆதாரங்கள் திருக்குர்ஆனிலும், நபீமொழிகளிலும் தெளிவாக இருக்கும் போது வஹ்ஹாபிகள் இவை ஷிர்க் என்றும் ஹறாம் என்றும் கூச்சலிடுவது ஏனோ ? இவர்கள் கொண்டாடும் இவர்களின் குருநாதர் இப்னுதைமிய்யஹ் என்பவர் கூட இந்த வேலை செய்துள்ளார் என்பது இவர்களுக்குத் தெரியாதா ? அடுத்த தொடரில் இவரும் தாயத் வேலை செய்திருப்பது அம்பலத்துக்கு வரும். 

கண் திருஷ்டியின் தத்துவம் 
மனிதனின் கண்ணில் சில சுரப்பிகள் உள்ளன. அவை கண்ணுக்கு அல்லது மனதுக்கு விருப்பமான ஒன்றைக் காணும் போது மட்டுமே சுரக்கும். அந்நேரம் கண்களில் இருந்து வெளிப்படும் ஒருவகை நச்சுக்கதிர் காணப்படும் பொருளைத் தாக்குகின்றது. அப்பொருள் உணவாக இருந்தால் அதில் ஒருவகை மாற்றமும், அது மனிதன் போன்ற உயிருள்ளதாயிருந்தால் அதில் இன்னொரு வகை மாற்றமும் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் போது அது கண்திருஷ்டி எனப்படும். 

கண் சுரப்பியின் நச்சுக் கதிர் தாக்கிய பொருள் மனிதனாயிருந்தால் அவனில் காய்ச்சல், சோர்வு, மயக்கம், நடுக்கம், மனக்குழப்பம், நீங்காத சிந்தனை போன்ற பல்வேறு மாற்றங்களும் ஏற்படும். நபீமொழியின்படி மருந்தற்ற நோயான மரணமும் ஏற்பட்டுவிடும். 

கண்ணில் இருந்து பொருளை வந்தடையும் நச்சுக் கதிர் மனிதனின் கண்ணுக்குத் தெரியாது. அது மிகவும் “ லதாபத் ” மிருதுவானது. மருத்துவ விஞ்ஞானம் இன்னும் முன்னேறி வரும் பொழுது இக்கதிரைப் பார்க்கத்தக்க கண்ணாடியை கண்டு பிடிக்க முடியும். 

கண்ணில் இருந்து வரும் நச்சுக் கதிரின் செயற்பாடு மனிதனைப் பொறுத்தும், அவனல்லாத ஏனைய உயிரினங்களைப் பொறுத்தும் வித்தியாசப்படும். 

சில உயிரினத்தைப் பொறுத்தவரை அதன் நச்சுக்கதிர் தாக்கினால் அவன் உடனே மரணித்து விடுவான். இத்தன்மை ஒருவகை பாம்பிடமும் உண்டு. 

இன்னும் சில உயிரினங்களைப் பொறுத்தவரை அது தனது நச்சுக்கதிர் கொண்டு தனது முட்டையைப் பார்வையால் பொரித்து அதிலிருந்து குஞ்சுகளை வெளிப்படுத்தும். இத்தன்மை கடலாமையிடம் உண்டு. 

நபீமார், இறைநேசர்களான அவ்லியாக்கள் போன்றோரின் கண்களில் உள்ள நச்சுக்கதிர் ஒரு மனிதனின் உடலைத் தாக்காமல் அவனின் உள்ளத்தில் பாய்ந்து அதைச் சீர்செய்துவிடும். 

ஒரு மனிதனுக்கு அறிவைக் கற்றுக் கொடுத்து அவனின் மனக்கண்ணைத் திறந்து வைத்தவர்களும் உள்ளனர். அவனின் கைபிடித்து அவனை அல்லாஹ்வின்பால் சேர்த்து வைத்தவர்களும் உள்ளனர். தமது பார்வை கொண்டு மட்டும் மெய்ஞ்ஞானப் பாதையைக் காட்டி மேஞ்சுவனம் சேர்த்து வைத்த மெய்யடியார்களும் உள்ளனர்.


ok

Wednesday 1 July 2015

430000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதரை மனிதர் கொன்ற சான்று!, இராமாயணம் உண்மை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்


------------------------------------------------------------------------------
ஸ்பெய்னில் உள்ள ‘பிட் ஆஃப் போன்ஸ்’ என்று அழைக்கப்படும் குகையிலிருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டை ஆராயும்போதே அவர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். அந்த மண்டையோடு நான்கு லட்சத்தி முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒருவரது மண்டை ஓடு என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.