Friday 20 March 2015

ஆத்மாவும் பிற மதங்களும்

ஆத்மா குறித்த சாக்ரடீஸ் கூறியவற்றுடன் கீதையை இதற்குள் வாசகர்கள் ஒப்பிட்டிருப்பார்கள். கிரேக்க மரபில் மேலும் பற்பல உருவகங்களும் விவாதங்களும் உள்ளன. இந்து ஞானமரபு போலவே தொன்மையும் ஆழமும் உடைய கிரேக்க மரபில்தான் இவ்வாறு ஒப்பிடத்தக்க கருத்துக்கள் உள்ளன. செமிட்டிக் அல்லது ஆபிரகாமிய மதங்களில் (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம்) எளிமையான நேரடியான  உருவகமே காணப்படுகிறது. மனித உடலுக்குள் பிரக்ஞை வடிவில் இருப்பது ஆத்மா. இது பாவத்தின் காரணமாக உடலில் குடியேறுகிறது.  இறைவனுக்கு நேர் எதிரான தீய சக்தியான சாத்தானின் தூண்டுதலால் பாவங்கள் செய்கிறது. உடலை நீத்தபின் நியாயத் தீர்ப்பு நாளுக்காக காத்திருந்து அந்த நாளில் தன் பாவ புண்ணியங்களுக்கு
ஏற்ப இறைவனால் நரகமோ சொற்கமோ அளிக்கப்பட்டு அங்கு செல்கிறது என்பது யூத, கிறிஸ்தவ மதத்தின் கருத்து.
இறைவனால் உருவாக்கபட்ட மனித ஆத்மா இறைவனின் கட்டளைப்படி இயங்க கடமைப்பட்டது. கட்டளைப்படி இயங்காவிடில் நியாத்தீர்ப்பு நாளில் நரகம் புகநேரும். கட்டளைப்படி இயங்குபவர்கள் சொர்க்கம் சென்று பலவகையான இன்பக் கேளிக்கைகளை துய்ப்பார்கள். இது இஸ்லாமிய
உருவகம். இம்மதங்களில் மனிதனுக்கு மட்டுமே ஆத்மா உண்டு என்ற கருத்து உள்ளது. பிற உயிர்களும் தாவரங்களும் ஆத்மாவில்லாத பொருட்களாகவே கருதப்படுகின்றன.
ஆத்மாவும் கரணிய நோக்கமும்
கீதையில் முன்வைக்கப்படும் ஆத்மா குறித்த இந்தக் கோட்பாட்டுக்கு கரணிய ரீதியான எந்த விளக்கம் அளிக்க இயலும்? எளிய பகுத்தறிவுப் பார்வையில் இதெல்லாம் வெட்டிப்பேச்சு என்றும், அன்றாட வாழ்வில் புலனறிதல்கள் மூலம் இதை அறியவோ பிறருக்கு நிரூபிக்கவோ எந்தவிதமான வழியும் இல்லை என்றும் சொல்லலாம். ஆகவே இது ஒரு பொய்யான கற்பனை என்று நிராகரித்தும் விடலாம். ஆனால் வரலாற்றையும் தத்துவத்தையும் அறிவியல் நோக்குடன் அணுகும் கரணிய ஆய்வு இன்றும் விரிவான விவாதத்தை மேற்கொண்டாக வேண்டும்.
‘ஆத்மா’ என்ற கருதுகோளானது உலகம் முழுக்க இரண்டு அடிப்படை வினாக்களுக்கான பதிலாக உருவாகி வந்துள்ள ஒன்றாகும்.
 1. பருப்பொருட்களினால் ஆன இப்பிரபஞ்சத்தில் பரும்பொருட்களிலான இந்த உடலுக்கும் உயிர்த்தன்மை என்ற இயல்பு உள்ளது. பருப்பொருட்களினால் ஆன இந்த உடலானது அந்த உயிரின் தேவைக்கு ஏற்ப வடிவம் கொண்டது. அதன் தேவைக்கு ஏற்ப இயங்குகிறது. அதைப் பாதுகாக்கவும் அதை மேலும் உருவாக்கவும் சலியாது உழைக்கிறது. அது நீங்கியதும் மீண்டும் வெறும் பருப்பொருளாகி விடுகிறது.மப்படியானால் அந்த உயிர்த்தன்மை என்பது என்ன?
 2. உயிர் கொண்ட உடல்களுக்குள் பிரக்ஞை எனும் அம்சம் உள்ளது. தன் இருப்பை அது உணர்கிறது. தன்னை பிறிதிலிருந்து பிரித்தறிகிறது. தன் புலன்களினால் புற உலகத்தைப் பார்த்து தன் கற்பனையில் ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கிக்கொள்கிறது. ஏன் அப்படிச்செய்கிறது? அந்த சிந்தனைகள் உருவகங்கள் போன்றவற்றுக்கு என்ன பொருள்?
அதாவது நம்முள் உள்ள உயிர் என்பது என்ன, அவ்வுயிராம் உருவகிக்கப்படும்  அகப்பிரபஞ்சம் ஏன் நிகழ்ந்துகொண்டிருக்கிறது?
இவ்விரு கேள்விகளுக்கான பதிலாக அது ‘ஆத்மா’ என்று உருவகிக்கப்பட்டது. மேலே நாட்டு மொழிகளில் இதற்கென உள்ள Soul (பிறப்பது) Spirit (ஆவி) போன்ற சொற்களின் மூலங்களுடன் ஒப்பிடுகையில் ஆத்மா (அதுவானது) என் சொல் மேலும் தத்துவார்த்தமாக உருவகிக்கப்பட்டிருப்பதாகப் படுகிறது.
மேற்குறிப்பிட்ட இரு வினாக்களுக்கும் நவீன அறிவியலும் ‘புறவயமான’ ‘நிரூபிக்கப்படத்தக்க’ பதில்கள் எதையும் அளிக்கவில்லை என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். நவீன அறிவுஜீவிகள் ஆகப்புதிய கோட்பாடாக தெரிதாவின் மொழியியல் தன்னிலை ழாக் லகானின் உளவியல் தன்னிலை குறித்தோ ஏதாவது சொல்வார்கள். அவையும் வெறும் ஊகங்கள் மட்டுமே. தன்னிலை, பிரக்ஞை ஆகியவற்றைப் பற்றி பத்து வருடங்களுக்கு ஒரு புதுக் கொள்கை உருவாகி வருகிறது.
அறிவியலில் உள்ள இந்த ஊகங்களின் பொதுத்தன்மை என்னவென்றால் இவை அனைத்துமே உயிர், பிரக்ஞை ஆகியவற்றின் உருவாக்கத்திற்கான மூலகாரணமாக ‘தற்செயல்’ என்பதையே முன்வைக்கின்றன என்பதுதான். காரணம் தற்செயலை மறுத்தால் உயிர், பிரக்ஞை ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு அடிப்படையான காரணம் உண்டு என்பதை ஏற்க வேண்டியிருக்கும். காரணம் உண்டு என்றால் அது என்ன என்றும் அது யாருடைய இச்சை என்றும் வினவ வேண்டியிருக்கும். ‘மறைந்து கிடப்பது என்ன யாருடைய இச்சை?’ என்று ரிக்வேதம் எழுப்பிய வினாவை அவர்களும் எழுப்ப வேண்டியிருக்கும். மதவாதிகளைப்போல அங்கீகரிக்கத்தக்க நிரூபிக்கத்தக்க புறவய விளக்கத்தை அறிவியலால் முன்வைக்கவே இயலாது என்று நான் கூறமாட்டேன். முடியலாம். ஆனால் இன்று உள்ளவை ஊகங்களே.
அறிவியல் அளிக்கும் அதி நவீன ஊகங்கள் அளவுக்கே காரிய-காரணத் தொடர்பு உடையதும், விரிவானதுமான ஊகமே வேதங்களின் பிற்பகுதியில் தொடங்கி உபநிடதங்களில் முழுமைபெற்று கீதை வெளிப்படுத்தப்படும் ஆத்மா குறித்த கோட்பாடு. உடலுக்குள் உள்ள ஆத்மா உடலை கருவியாக்கி தன்னைச் சூழ்ந்துள்ள பிரபஞ்சத்தை அறிகிறது. அதிலிருந்து வேறுபடுத்தி தன்னை தானே அறிகிறது. தானே தன் உடல் என்று எண்ணுகிறது. உடலின் ஒவ்வொரு அணுவும் வாழ எண்ணும் ஆத்மாவின் இச்சையின் பருவடிவமே. நடக்க வேண்டும் என்ற இச்சையே கால்கள். செயல்வேட்கையே கைகள். ஒளிவேட்கையே கண்கள்.
இதேபோல இப்பிரபஞ்சத்தின் பருவடிவத்தையே ஒட்டுமொத்தமாக ஒர் உடலாகக் கொண்டால் அதன் ஆத்மாவாக இருப்பது எது? அதுவே பரமாத்மா. நம்முடைய உடலில் இருக்கும் ஆத்மாவே நம் கைவிரல்களுக்கும் கால் விரல்களுக்கும் ஆத்மாவாக உள்ளது. அதுபோல பிரபஞ்சத்தின் ஆத்மாவே அதில் உள்ள ஒவ்வொரு துளிக்கும் ஆத்மாவாக உள்ளது. கை விரலின் உயிர், கால்விரலின் உயிர் உன்று பிரித்துப் பார்ப்பது போலவே நாம் நம்மைச் சுற்றியுள்ள உயிர்களைப்பிரித்துப் பார்க்கிறோம். இருப்பது ஒரே பேருயிர், ஒரே பிரபஞ்சம். பிற அனைத்தும் அதன் துளிகளிலும் துளிகளாகிய உறுப்புகள் மட்டுமே.
ஒரு உடலில் உள்ள கை தன்னை ஒரு தனித்த இருப்பாக கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் அக்கற்பனை பொய்யானது. அதுவே மாயை. மாயையால் பிரபஞ்சப் பேராத்மாவின் பகுதியான மானுட ஆத்மா தன்னை தனித்துக் காண்பதும் மாயையே. ஆனால் இந்த மாயையானது ஒரு ‘பொய்’ அல்ல. அது வேறுவகை யதார்த்தம். அந்த யதார்த்தத்தில்தான் நம் அன்றாட வாழ்கை நடந்து கொண்டிருக்கிறது. அதை நிராகரிக்க இயலாது. என்னுடைய உடல் ஒரு முழுமை என்பது எத்தனை உண்மையோ அதேயளவு உண்மைதான் என் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தனித்தனியான பிறப்பிறப்பும், சுக துக்கங்களும், வாழ்க்கையும் உள்ளன என்பது. ஒரு யதார்த்தம் இன்னொன்றை மறுப்பதில்லை. அது அதைவிட பெரு மடங்கு பிரம்மாண்டமான இன்னாரு யதார்தத்தத்தில் அது அமர்ந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இந்து ‘ஆத்மா கோட்பாடு’ இதுவே.
இங்கே என் நிலைபாடை சொல்லி மேலே செல்கிறேன். என்னுடைய நோக்கில் அறிவிலும் தத்துவமும் அளிக்கும் ஊகங்களில் ஆத்மா எனும் கோட்பாடே பிரபஞ்சம் தழுவியதாகவும் பலநூறு வாழ்க்கை சார்ந்த வினாக்களுக்கு விடையளிப்பதாகவும் உள்ளது. அதேசமயம் என் வாழ்வில் தனிப்பட்ட முறையில் இதை நான் திட்டவட்டமாக உணராத வரை இதை நாம் ‘நம்பி ஏற்கப்’ போவதில்லை. இக்கோட்பாடுகள் அனைத்தையும் தொடர்ந்து கண்காணித்து பயில்பவனின் இடத்திலேயே என்னை வைத்திருப்பேன்.
ஆனால் நான் அறியமுடியாமைவாதி (agnostic) அல்ல. அது ஒர் எதிர்நிலை. ஒரு வகையில் அறிவின் பயனையும் தத்துவத்தின் பணியையும் மறுப்பது. நவீன மேலைச் சிந்தனையில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ள எதையும் முழுக்க அறிந்துவிடமுடியாது என்றுவாதிடும் அறியமுடியாமைவாதம் கிறிஸ்தவம் முன்வைத்த எளிய பிரபஞ்ச உருவாக்கத்தை உதறி, நவீன அறிவியல் முன்வைக்கும் மாபெரும் பிரபஞ்சப் புதிர்களுக்கு விடையும் காணமுடியாமல், தவித்து நிற்கும் ஒரு நிலையே. என்னை நான் சாதகன் (அறிய முயல்பவன்) என்று அடையாளப்படுத்திக் கொள்வேன். தங்களை எங்கு நிறுத்திக் கொள்வது என்பதை வாசகர்தான் முடிவு செய்ய வேண்டும்.
சாங்கிய யோகத்தின் இப்பகுதியில் கிருஷ்ணர் இன்றும் அடிப்படையான வினாக்களுக்குள் புகவோ தத்துவார்த்தமான ஆய்வை நிகழ்த்தவோ இல்லை. அர்ஜுனனின் தடுமாற்றத்திற்கான விடையாக அன்றைய சூழலில் ஒரு சிறந்த ஷத்ரிய வீரனுக்கு  தேவையான ஒரு தர்க்க அமைப்பை முன்வைக்கிறார். அது உபநிடதங்கள் பூத்து கொண்டிருந்த காலம். ஆகவேதான் உபநிடத ஞானமாகிய ‘அழிவிலாத ஆத்மா’ என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார். மறுபிறப்பு சார்ந்த நம்பிக்கையை அதன் அடிப்படையில் விளக்குகிறார். இந்த நடைமுறை யதார்த்தம் சார்ந்த தத்துவத்தை சாங்கியம் என்று வகுத்துக்கொண்டு இதை ஏற்று மனதை ஒருமுகப்படுத்தி நடுநிலையில் நின்று ஆற்றும் செயலை யோகம் என்று விளக்குகிறார்.
பரம்பொருள் இரண்டாகுமா? சங்கர-ராமானுஜ விவாதம்
இப்பகுதியில் பனிரண்டாவது பாடலை முன்வைத்து முதல் ஆசாரியர் இருவரின், நடந்த விவாதம் ஒன்றை குறிப்பிட வேண்டியுள்ளது. (இத்தகைய விவாதங்கள் உண்மையில் கீதையின் இந்த பாடலை முகாந்திரமாக வைத்து நடைபெறுவன. ஆகவே கீதையின் பொருளில் இருந்து பெரிதும் விரிந்து செல்வன. எனினும் கீதை எத்தகைய அறிவுச் செயல்பாட்டின் களமாக இருந்தது என்று காட்டும் பொருட்டு இவற்றையும் சேர்ந்து கற்பது நல்லது. கீதையை ஒரு நூலாக அல்ல, ஒரு விவாதப் பரப்பாகவே கற்க வேண்டும் என்று ஏற்கனவே கூறியது இதன் பொருட்டேயாகும். வாசகர் இப்பகுதி சிக்கலாக இருப்பதாக உணர்ந்தால் விட்டுவிட்டுக்கூட மேலே செல்லலாம்)
சங்கரர் சொல்வது இது. கண்ணன் இப்பாடலில் இதற்கு முன் எப்போதும் ‘நான்’ இல்லாமலிருந்ததும் இல்லை இனி இல்லாமலே இருக்கப் போவதும் இல்லை. அது போலத்தான் ‘நீ’ யும் என்று கூறி நான், நீ, என்ற பேதத்தைக் காட்டுகிறார். ஆனால் இது உண்மையான பேதம் இல்லை. அனைத்துமே ஒன்றுதான் என்ற பொருளிலே இங்கே நாம் என்ற சொல்லாட்சி வருகிறது. சங்கரரின் அத்வைதப்படி ஒரு ஆத்மா தன்னைப் பிறிதிலிருந்து பிரித்துப் பார்ப்பது என்பதே மாயையின் விளைவுதான். மெய்ஞானம் பெற்றவனுக்கு பேத புத்தி இருக்காது. கிருஷ்ணன் பேதபுத்தியை கடந்தவர். ஆயினும் இங்கு அர்ஜுனன் பேதபுத்தியை கடக்காதவனாக இருப்பதனால் மட்டுமே  அவனுக்குப் புரிவதற்காக ‘நான்- நீ’ என்று பிரித்து கூறுகிறார் என்கிறார் சங்கரர். பிற்பாடு இந்த பேதம் தகர்க்கப்படுகிறது என்று வாதிடுகிறார்.
வசிஷ்டாத்வைதத்தின்படி ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறுவேறுதான். அப்படி உணரப்படுவது மாயையினால் அல்ல. அது ஒரு உண்மை. அது பரமாத்மாவின் இச்சை. பரிபூரணத்தில் ஜீவாத்மா பரமாத்மாவை அடைகிறது. இதை நிறுவ இந்தப் பாடலை விரிவாக விவாதித்து பயன்படுத்திக் கொள்கிறார் ராமானுஜர். ‘பரம்பொருளாகிய நான் நிரந்தரமானவன் என்பது எத்தனை உண்மையோ அப்படியே ஜீவாத்மாவாகிய நீயும் நிரந்தரமானவன் என்பதும் உண்மை’ என்று இங்கே கிருஷ்ணர் கூறுகிறார் என்கிறார் ராமானுஜர்.
இதைத் தொடர்ந்து ராமானுஜர் தன் உரையில் சங்கரரின் அத்வைதம் அல்லது அபேதவாதம், பாஸ்கரர் கூறும் பேத-அபேதவாதம் ஆகியவற்றை விரிவான உதாரணங்கள் மூலம் நிராகரிக்கிறார். பாஸ்கர மதத்தின்படி இப்புவியில் பல ஆத்மாக்கள் உண்டு என்ற தோற்ற நிலையானது ‘உபாதி’ என்ற மனமயக்கம் மூலம் உருவாகிறது (உபாதி என்றால் நிபந்தனையுள்ள வரையறைக்கு உட்பட்ட, எல்லைகளுக்கு உட்பட்ட என்னும் சொற்பொருள் உண்டு) இது தொடக்க நிலையில் இருக்கிறது, ஞானம் பெற்றதும் இந்த பன்மை நோக்கு நீங்குகிறது. ஒருமை நோக்கு உருவாகிறது.
ஆனால் அபேதவாதத்தின்படி பேதபுத்தி என்பதே அஞ்ஞானம் (அவித்யை)தான். ஞானத்தை உபதேசிக்கும் கிருஷ்ணனுக்கு எப்படி ‘உபாதி’ முதலிய குறைபாடுகள் உண்டாயின? பரம்பொருளாகிய கிருஷ்ணனுக்கு மனமயக்கமும் அவித்யை (அறியாமை) ஆகியவை உண்டா என்று வாதாடுகிறார் ராமானுஜர்.
இங்கு மாயையின் முடிவிலா வல்லமையை சங்கரரின் அத்வைத மதத்தைச் சார்ந்தவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.ஞானம் மூலம் அவித்யை அகன்ற பிறகும் கூட அது ஒரு சில தருணங்களில் தன் வடிவின் தொலைதூரத்து படிமத்தை ஒரு ஜீவாத்மாவின் நினைவில் விட்டுச் சென்றிருக்கக் கூடும். கிருஷ்ணன் ஞானி. ஆயினும் அஞ்ஞானத்தில் இருக்கும் அர்ஜுனனிடம் அன்பும் இரக்கமும் கொண்டு அவனுக்காகப் பரிந்து அவனுடன் உரையாடுகிறான். ஆகவே இந்த மெல்லிய மனமயக்கம் அவனுக்கு ஏற்பட்டு மாயையின் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். எரிந்த துணியின் சாம்பல் வடிவைப் பர்த்தால் துணி எரிந்ததை கண்ணால் கண்டபிறகும் துணி தெரிவதைப் போல. (இது பாதிதானுவிருத்தி எனப்படுகிறது) இது அத்வைதிகயின் வாதமாக இருந்திருக்கிறது. இதை தன் பூர்வபக்ஷமாகச் சுட்டிக்காட்டும் ராமானுஜர் இதை எதிர்த்து வாதாடுகிறார்.
‘கானல் நீர் என்று அறிந்த பின் ஒருவன் தாகத்திற்கு அதில் தண்ணீர் மொள்ள முயல்வானா என்ன? அத்வைத ஞானம் அடைந்த கிருஷ்ணன் அதன்பிறகு வேத ஞானத்தை உபதேசம் செய்வானா? என்று ராமானுஜர் கேட்கிறார்.
அத்வைதிகள் இன்னொரு உதாரணம் கூறினார்கள். கிருஷ்ணனுக்கு அர்ஜுனனும் பரமாத்மாவே என்று தெரியும். கண்ணாடியில் தெரியும் பிம்பத்துடன் உரையாடுவது போல பரமாத்மா பரமாத்மாவுடன் உரையாடுகிறது (இது பிம்ப -பிரதிபிம்ப வாதம்) இதையும் பூர்வ பக்ஷமாக எடுத்துக் கொள்ளும் ராமானுஜர் தன் பிம்பம் என்று தெரிந்தபின் ஒருவன் பேசமுற்பட்டான் என்றால் அவன் அறிவு மயக்கத்தில்தானே இருக்கவேண்டும்? மேலும் பிம்பத்துடன் பேசலாம், பிம்பமும் பரமாத்மா என்றால் அதுவும் திருப்பி பேசவேண்டுமே என்று கூறி இதை நிராகரிக்கிறார்.
அர்ஜுனனும் கிருஷ்ணனும் இருவருமே பரமாத்மாவின் வடிவங்கள் என்றால் இருவருமே அறியாமையில் இருந்தால்தான் இந்த கீதோபதேசம் நடந்திருக்க இயலும் என்று வாதிடும் ராமானுஜர் அர்ஜுனன் மாயையில் இருக்கிறான் என்றால் கீதையின் ஞானம் கிடைத்ததும் அவனும் பரம்பொருள் ஆகிவிடவேண்டும். அப்படி நிகழவில்லை. கிருஷ்ணன் மாயையில் இருக்கிறார் என்றால் அவர் கற்பிப்பவற்றுக்கு பொருள் இல்லை. ஆகவே சங்கரரும் பாஸ்கரரும் கூறும் வாதங்கள் பொய் என்று வாதிடுகிறா¡ர் ராமானுஜர்.
என் நோக்கில், கீதையின் புனைவுத் தருணத்தில் உள்ள ஒரு வரியை பிய்த்தெடுப்பதன் மூலமும், விரிவான முரணியக்கம் கொண்ட நூலின் அந்த முரண்பட்ட சரடுகளை உதாசீனம் செய்துவிட்டு அவ்வரியை பரம்பொருளின் நேரடிச் சொல்லாக முன்வைப்பதன் மூலமும் இந்த வாதத்தை ராமானுஜர் நிகழ்த்துகிறார் என்று படுகிறது. சங்கரர் கிருஷ்ணனை பரம்பொருளாகவும் கீதை வரிகளை பரம்பொருளின் கூற்றாகவும் நினைக்கவில்லை. தொன்மையான ஞான நூலாக மட்டுமே எண்ணுகிறார். ராமானுஜர் நானூறு வருடம் கழித்து பேசும்போது நிலைமை முற்றாக மாறிவிட்டது என்பதே உண்மை. கீதை இறை வாக்கியமாக வைணவ மதத்தவரால் கூறப்பட்டுவிட்டது. இறைவனின் எல்லா சொற்களுமே ஒவ்வொரு தருணத்திலும் முக்கியத்துவம் கொண்டவை என்று வாதிடப்பட்டது.
இந்த விவாதங்கள் தத்துவார்த்தமான நுட்பங்களுக்குள் செல்கின்றன என்பதனால் மேலும் விரிவாக ஆராய வேண்டுமானால் தனியாகவே பயில வேண்டும். மேலும் இவ்விவாதத்தில் மதச்சார்பு, தங்கள் தரப்பை மட்டுமே உண்மை என நிறுவும் வேகம், எப்போதும் இருப்பதனால் இவற்றை நாம் ஒரு வித கவனத்துடனேயே படிக்க வேண்டியிருக்கிறது. வாசகர்களுக்கு இந்த விவாதத்தை இவ்வாறு சுருக்கிச் சொல்கிறேன். பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் ஆற்றல் அல்லது பிரக்ஞை என்பது பிளவற்றது, ஒன்றானது என்பது சங்கரர் கூற்று. அதை மனமயக்கத்தால் நாம் என்றும் பிறிது என்றும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவே மாயை. ஞானம் வந்தால் இந்த மாயை மறைகிறது. கிருஷ்ணன் இங்கே அர்ஜுனன்  ஞானம் அடையாமல் இருப்பதனால் நானும் நீயும் என்று பேசுகிறார் என்று சங்கரர் சொல்கிறார். இல்லை, ஒருபோதும் பரம்பொருள் ஆத்மாக்கள் ஆக ஆவதில்லை. அது வேறுதான். ஆகவே கிருஷ்ணன் நான் என தன்னை வேறுபடுத்திச் சொல்கிறார் என்கிறார் ராமானுஜர்.
‘உடலானது– ‘அது-ஆத்மா’
பதிமூன்றாம் பாடலில் உள்ள ‘தேஹி’ என்ற சொல் தத்துவார்த்தமாக முக்கியமானது. ஆத்மா இங்கு ‘உடலானவன்’ (தேஹத்தில் உறைபவன். தேகம் ஆனவன்) என்று குறிப்பிடப்படுகிறது. உடலின் பற்பல பருவ பரிணாமங்களை ஆத்மா கடந்து வந்து இறுதியில் பிறிதொரு உடலை எடுத்துக் கொள்கிறது என்று இந்த வரி கூறுகிறது. உடல் வேறு ஆத்மா வேறு, உடலின் நிலைகளை ஆத்மா அடைவது மாயையினால்தான் என்பது சங்கரரின் வாதம். ஆனால் மத்வர் இவ்வரிக்கு விரிவான விளக்கம் கூறுகிறார். இவ்வரி மூலம் ஆத்மா உடலில் இருந்து சுதந்திரமானது அல்ல என்றே கூறப்படுகிறது என்பது அவரது கூற்றாகும். உடலின் மாற்றங்கள் ஆத்மாவுக்கும் உண்டு என்றுதான் கிருஷ்ணர் கூறுகிறார் என்று வாதிடும் மத்வர் இதே விஷயங்களை வேதங்களும் கூறுகின்றன என்றும் வேதங்கள் கூறுவதனாலேயே இவை மறுக்க முடியாத உண்மைகளாக உள்ளன என்றும் விளக்க முற்படுகிறார்.

No comments:

Post a Comment